Last Updated:
வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பௌமிக். 23 வயதான இவர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி வந்தார்.
வங்கதேசத்தில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பௌமிக். 23 வயதான இவர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கடை மூடப்பட்ட பின்னர் வழக்கம்போல் அங்கேயே தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் திடீரென அந்த கடையில் தீப்பற்றியுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். பின்னர், கடைக்குள் கருகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றினர். முதலில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்து என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.
இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்த மர்ம நபர்கள், சஞ்சல் சந்திரா, தூங்கிக் கொண்டிருந்த கடையின் ஷட்டரை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவர் கடை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர கொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தந்தை இறந்த நிலையில், தனது தாய், உடல்நலம் பாதித்த அண்ணன் மற்றும் தம்பி ஆகிய மூன்று பேரையும் சஞ்சல் சந்திராவே காப்பாற்றி வந்துள்ளார். ஒற்றை ஆளாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து வந்தவரை இழந்து, அவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற இளைஞரை, அடாவடி கும்பல் அடித்துக் கொன்று உடலை பொது வெளியில் எரித்த சம்பவம் உலகையே உலுக்கியது. அண்மையில் லிட்டன் சந்திரதாஸ் என்ற வர்த்தகர் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது, சஞ்சல் சந்திரா என்ற இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதால் இந்துக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர்…! குலைநடுங்க வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன…?


