Last Updated:
வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்த நிலையில், அந்த அணியை ஐசிசி உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து அந்த நாட்டைச் சேர்ந்த பவுலர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் அணி தொடர்ந்து தெரிவித்து வந்தது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் வங்கதேச அணி தனது முடிவில் விடாப்பிடியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணியை நீக்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் வந்து வங்கதேசம் விளையாட வேண்டும் என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானமாக இருந்தது. இதுகுறித்து முடிவு எடுப்பதற்கு வங்கதேசத்திற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ந்து தனது முடிவில் வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததால் அந்த அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கியுள்ளது ஐசிசி.
வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி குரூப் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
புதன் அன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இந்தியா வந்து விளையாடுவது குறித்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் இறுதி முடிவு எடுப்பதற்கு 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்துள்ள சூழலில் ஐசிசி விதிகளின்படி வங்கதேசம் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.


