Last Updated:
நரேந்திர மோடி தலைமையில் 45 இடங்களில் 61 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இளைஞர்கள் சிறிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
அரசு பணிகளில் இணையும் இளைஞர்கள், தங்களது மட்டத்தில் சிறிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு துறைகளுக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு பணி ஆணைகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வேலைவாய்ப்புத் திருவிழாக்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி, 18ஆவது முறையாக நடைபெற்ற திருவிழாவில், நாடு முழுவதும் 45 இடங்களில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க தொடர் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகம் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம், இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் ஓர் அங்கமாக இணையும் இளம் ஊழியர்கள், தங்களது மட்டத்தில் சிறிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.


