Last Updated:
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி வருகிறது. இந்த நகரில்தான் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் சுமார் 23 பேர் உயிரிழந்த சோகம் அண்மையில் அரங்கேறியது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்து 22 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சுத்தமான நகரம் எனப் பெயர் பெற்ற பகுதியில் அரங்கேறி வரும் அவலத்தின் பின்னணி என்ன?
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி வருகிறது. இந்த நகரில்தான் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் சுமார் 23 பேர் உயிரிழந்த சோகம் அண்மையில் அரங்கேறியது.
அந்நகரின் பகீரத்புரா பகுதியில் நர்மதா நதியிலிருந்து குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு பொது கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசுபட்டது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் மாசு கலந்த நீரை பருகி உள்ளனர்.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரே நாளில் நகரமே பெரும் ரணகளமானது. பலரும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல், வயிற்றுப்போக்கு என வரிசையாக மருத்துவமனைகளில் குவிய ஆரம்பித்தனர். பலர் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாலும், இந்த மோசமான சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சூழலில் மீண்டும் அதே அசம்பாவிதம் தற்போது அப்பகுதியில் அரங்கேறி இருக்கிறது. இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் கழிவுநீர் கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் 22 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இவர்களில் மோசமான நிலையில் இருக்கும் 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே 23 பேரை பறிகொடுத்திருக்கும் மத்தியப்பிரதேச மாநில அரசு மீண்டும் அதே சிக்கலில் சிக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Jan 23, 2026 10:06 PM IST
மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான குடிநீரை பருகிய 22 பேருக்கு உடல்நலக்குறைவு… அவலத்தின் பின்னணி என்ன…?


