Last Updated:
பிரதமர் மோடி நாளை திருவனந்தபுரத்தில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாடு – கேரளா வழியாக இயக்கப்படும் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ரயில்வே வாரியம் புதிதாக மூன்று அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைய உள்ளது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைய உள்ளது.
இந்த ரயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவிலில் இருந்து கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக மங்களூருக்கு மற்றொரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த மூன்று அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை நாளை பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்க உள்ளார். அம்ரித் பாரத் ரயில்கள், பாரம்பரிய மெயில் மற்றும் விரைவு ரயில் சேவைகளை விட மேம்பட்ட வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


