அலோர் ஸ்டார்:
கெடா மாநில அரசு, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் மாநில அளவிலான பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு (EXCO) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
1951-ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 9(1)-இன் கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் துணைச் செயலாளர் (நிர்வாகம்) டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தபா கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வக் கடிதம், அனைத்து மாநில மற்றும் கூட்டரசு அரசுத் துறைகள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் உள்ளூர் அதிகார அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்பை மாநில மந்திரி பெசார் சனுசி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
வழக்கமாக கெடா மாநிலத்தில் தைப்பூசம் ‘சிறப்பு விடுமுறை’ (Occasional Holiday) பிரிவின் கீழ் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் அமைவதால், கெடா வாழ் இந்துக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வழிபாடுகளையும் கொண்டாட்டங்களையும் சிறப்பாக முன்னெடுக்க இந்த விடுமுறை வழிவகுக்கும்.
இந்த அறிவிப்பு கெடா மாநிலத்தில் உள்ள இந்து சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




