Last Updated:
கடந்த சில நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெறும் மூன்றாவது ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டாரில், ‘கேசோ மஹான்சன்’ கிராமத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் ‘ஹை அலர்ட்’ விடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் டெக்வார் கிராமத்தில் இரவு 7:30 மணியளவில் மர்மமான ட்ரோன் போன்ற ஒரு பொருள் சுமார் 10 நிமிடங்கள் வட்டமிட்டது. இதைக் கவனித்த இந்திய ராணுவத்தினர், அந்த ட்ரோனை வீழ்த்துவதற்காகப் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ராணுவத்தின் இந்தத் துரித நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் மறைந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெறும் மூன்றாவது ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.
பாகிஸ்தானிலிருந்து வரும் இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் அல்லது போதைப்பொருட்களை வீசுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வரும் ஜனவரி 26 குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், இந்த ஊடுருவல்கள் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றன.


