
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரை நடைமுறையில் உள்ள தாபன விதிக்கோவையின் படி, அரச ஊழியர்கள் தைப்பொங்கல், ரமழான், சிங்கள–தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி, நத்தார் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற யாத்திரிகப் பயணங்களுக்கும் 10,000 ரூபாய் வரை முற்பணம் பெறக்கூடிய வசதி இருந்து வருகிறது.
இந்த முற்பணம் வட்டியின்றி 08 மாத தவணைகளில் அல்லது அதற்கு முன்னதாகவும் அறவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூலம், இந்தப் பண்டிகை முற்பணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்கொடுப்பணத்தை 15,000 ரூபாயாக அதிகரிக்க இயலுமாகும் வகையில் தாபன விதிக்கோவையின் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கும், இது குறித்து தேவையான சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

