
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துள்ள ஜூலி சாங், ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார். குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதில் அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, அவர் வழங்கிய விசேட ஆதரவையும் ஜனாதிபதி இச்சந்திப்பில் நினைவுகூர்ந்து பாராட்டினார்.
2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சாங், அமெரிக்கா–இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட, இரு நாடுகளுக்கிடையிலான பல முக்கிய மைல்கற்களில் தலைமைத்துவம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

