Last Updated:
“இனி நான்தான் வெனிசுலாவுக்கும் அதிபர்!” என தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அறிவித்துக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது முதல் இலக்காக நிர்ணயித்துக்கொண்டது வெனிசுலா கைப்பற்றுவதை தான். “அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு சர்வாதிகாரி இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் அடிக்கடி கூறி வந்தார்.
கடந்த வாரம் வெனிசுலா தலைநகர் கராகசை “ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” என்ற பெயரில் அமெரிக்க படைகள் தாக்கின. வெனிசுலாவின் முக்கிய ராணுவத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் சில மணி நேரங்களிலேயே முடக்கப்பட்டன. வெறும் இரண்டரை மணி நேரங்களில் வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இருந்தே உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் அடுத்த பிரம்மாஸ்திரத்தை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப். நான் தான் இனிமேல், வெனிசுலாவுக்கும் அதிபர் என்பது தான் அது. பொதுவாக ஒரு நாட்டின் அதிபர் பிடிபட்டால், அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவரைத்தான் இடைக்கால அதிபராக அமெரிக்கா அறிவிக்கும். ஆனால், டிரம்ப் ஒரு படி மேலே போய் நான் தான் அதிபர் என அறிவித்துக்கொண்டுள்ளார்.
“வெனிசுலாவில் ஜனநாயகம் திரும்பும் வரை, நானே அந்த நாட்டின் தற்காலிக அதிபர் என்று பிரகடனம் செய்துக் கொண்டுள்ளார். “வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகள் இனி அமெரிக்காவின் பாதுகாப்பில் இருக்கும், அந்த நாட்டு மக்கள் இனி சுதந்திரமாக சுவாசிப்பார்கள்” என்றும் டிரம்ப் தனது டிரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெனிசுலாவின் எல்லைகளில் அமெரிக்க ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் அமெரிக்காவில் அமர்ந்து கொண்டே வெனிசுலாவிற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் பேசி, சுமார் 35,000 கோடி மதிப்பிலான 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவிற்கு டிரம்ப் பெற்றுள்ளார்.
வெனிசுலாவின் எண்ணெய் வருமானம் முழுவதையும் அமெரிக்காவின் கருவூலக் கணக்கில் முடக்கி வைக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த நிதியை அமெரிக்காவின் அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாது. “இது ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறிக்கும் செயல்” என்று ரஷ்யா எச்சரித்துள்ளது ஆனால் டிரம்ப்போ, “நான் வெனிசுலாவைச் சீரமைக்கப் போகிறேன், அதை மீண்டும் ஒரு சொர்க்கமாக மாற்றுவேன்” என்று கூறி வருகிறார்.


