மினி சட்டப்பேரவைத் தேர்தல் என அழைக்கப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணியான மகாயுதியும் உத்தவ் தாக்ரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் என்சிபி கூட்டணியான மகாவிகாஸ் அகாதியும் மோதுகின்றன. இம்முறை ராஜ் தாக்கரேவின் மராட்டிய நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து “மராட்டிய பெருமை” என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்தத் தேர்தலில் அஜித் பவாரின் NCP கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராகவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
தேர்தலுக்கான பரப்புரையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மும்பையில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மும்பை வெறும் மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம் என்று குறிப்பிட்டார். மேலும், மும்பையை லண்டன், நியூயார்க் போன்ற உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற பாஜகவின் மேயர் தேவை என்றும் கூறினார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பேசிய மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே அவரை ‘ரஸமலாய்’ என்று கிண்டலடித்துள்ளார். “தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இந்த ‘ரஸமலாய்க்கு’ மும்பையைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பால் தாக்கரே தென்னிந்தியர்கள் தொடர்பாக கூறிய கருத்தையும் மேற்கோள் காட்டினார்.
மும்பை எப்போதும் மகாராஷ்டிராவின் ஒரு அங்கம்தான் என்றும், அதன் அடையாளத்தை மாற்ற முயல வேண்டாம் என்றும் ராஜ் தாக்கரே எச்சரித்தார்.
முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்துள்ளார். மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்க பாஜக சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களின் தியாகத்தால் மும்பை உருவானது என்றும் அதை ஒரு சர்வதேச நகரம் என்று கூறி அதன் தனித்துவத்தை பாஜக சிதைக்கப் பார்க்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என சிவசேனா உத்தவ் பிரிவு எம்பி சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவையும், மும்பையையும் பிரிக்க முடியாது என்றும் மகாராஷ்டிராவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மும்பை இருக்கும் என்றும் அண்ணாமலைக்கு சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, யார் மிரட்டலுக்கும் தான் அஞ்சமாட்டேன் எனக் கூறியுள்ளார். அண்ணாமலை மும்பையின் முக்கியத்துவத்தையும், அதன் பொருளாதார வளர்ச்சியையும் குறிக்கவே ‘சர்வதேச நகரம்’ என்று கூறினார் என்றும், அதை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும் பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

