
எம்.எஸ்.எம்.ஹனீபா
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு- கொழும்பு நகரங்களுக்கு இடையிலான புலத்திசி கடுகதி புகையிரத சேவை ஞாயிற்றுக்கிழமை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதான அதிபர் எஸ். சசீகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இருந்து மீண்டும் நண்பகல் 11.50 மணிக்கு கொழும்புக்கான நேரடி புலத்திசி கடுகதி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் அரச. தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள புலத்திசி கடுகதி சேவை சேவையானது மட்டக்களப்பில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புலத்திசி கடுகதி புகையிரத சேவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை முன்னெடுக்கப்படவுள்ளது.
புலத்திசி கடுகதி புகையிரத சேவையானது மட்டக்களப்பில் இருந்து அதிகாலை 01.30 மணிக்கு ஏற்கனவே சேவையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த பரிட்சாத்த புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பில் இருந்து காலை 05 மணிக்கு கொழும்புக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு கல்லோயா சந்தி வரையயில் சென்று திருகோணமலையில் இருந்து வரும் புகையிரதம் கொழும்புக்கான இணைப்பு சேவையில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவை கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

