Last Updated:
ஹைதராபாத் கவேலிகூடா பகுதியில் நாகலட்சுமி தொடர்பாக ஜம்புல மகேஷ், ரத்தினம் இடையே மோதல் ஏற்பட்டு, ரத்தினம் மகேஷை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ஹைதராபாத்தில் திருமணமான பெண்ணுடன் பழக்கத்தில் இருந்த இரு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் உள்ள கவேலிகூடா வென்ச்சர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், உடலில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதை பார்த்த ஆடு மேய்க்கும் நபர் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். சடலம் என்பதால் தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர்.
உடலில் தென்பட்ட காயங்களை வைத்தும், சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை வைத்தும், நடந்தது ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரிக்க, சடலத்தின் பாக்கெட்டில் கிடைத்த ஆதார் கார்டை வைத்து கொலை செய்யப்பட்டவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்த 24 வயதான ஜம்புல மகேஷ் என கண்டுபிடிக்கப்பட்டது.
சலூன் கடை ஊழியரான இவருடன் தொடர்பில் இருந்தவர்களையும், செல்போனில் உரையாடியவர்களின் விவரங்களையும் சேகரித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஹைதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் நாகலட்சுமி என்பவர் போலீஸ் வலையில் சிக்கினார். ஏற்கனவே திருமணமான நாகலட்சுமி, கொலை செய்யப்பட்ட மகேசுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார்.
மேலும் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி உல்லாசமாக இருந்த காலத்தில், நாகலட்சுமிக்கு ரத்தினம் என்ற மற்றொருவருடன் இரண்டாவதாக ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி பழக ஒருகட்டத்தில் தனது காதலிக்கு மகேஷ் என்பவருடனும் தொடர்பு இருந்தது ரத்தினத்திற்கு தெரியவந்தது. அவர் மகேஷை கடுமையாகக் கண்டித்துள்ளார். நாகலட்சுமி உடனான பழக்கத்தைக் கைவிட்டு இனி அவரது பக்கமே திரும்பக் கூடாது என எச்சரித்துள்ளார்.
ஆனால் மகேஷ் அதை காதில் கூட வாங்காமல் நாகலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரம் அடைந்த ரத்தினம், அவரை கொலை செய்ய முடிவெடுத்து கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு மது அருந்தி விட்டு பைக்கில் புறப்பட்ட மகேஷை பிந்தொடர்ந்து சென்ற ரத்தினம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வண்டியை வழிமறித்துள்ளார். என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள், திடீரென்று மிளகாய் பொடியை கண்களில் தூவி, மறைத்து வைத்திருந்த கோடாரியால் மகேஷை தாக்கி நிலை குலைய வைத்த ரத்தினம், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் கோடாரியை புதர்களில் வீசிவிட்டு ரத்தினம் தப்பி ஓடினார். போலீஸ் விசாரணையில் வெளிவந்த இக்கொடூர சம்பவத்தை தொடர்ந்து நாகலட்சுமியின் இரண்டாவது காதலனான ரத்தினத்தை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். முக்கோண காதலில் ஒரு பெண்ணிற்காக மோதிக் கொண்ட இரு ஆண்களில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hyderabad,Telangana


