Last Updated:
காரில் பிரசவம் பார்த்த மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் காருக்குள்ளேயே வைத்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது, பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.
கேரள மாநிலம், தலச்சேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணி ஒருவர், கொச்சி அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார். வரும் 22ஆம் தேதிதான் அவருக்குப் பிரசவ தேதி எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையை நெருங்கிய நிலையில் காருக்குள்ளேயே குழந்தை வெளியே வரத் தொடங்கியது. இதனால் மருத்துவர்கள் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்து காரையே பிரசவ அறையாக்கி, பிரசவம் பார்த்தனர். மருத்துவப் பணியாளர்கள் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்ட நிலையில் தாயும் சேயும் நலத்துடன் உள்ளனர். பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவிற்குப் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


