Last Updated:
மத்திய அரசு புதிய கலால் வரி, ஜிஎஸ்டி உயர்வு மூலம் சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை 18 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு சிகரெட் உள்ளிட்ட அனைத்துப் புகையிலைப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது புகையிலைப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. புதிய சட்டத்தில் உள்ள வரி விதிப்புகள், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால், அன்று முதல் புகையிலை மற்றும் பான் மசாலாவின் விலைகள் உயருகின்றன.
இதில் சிகரெட்டிற்கு இதற்கு முன்பு 28 சதவீதம் ஜிஎஸ்டி, ஆபத்தை ஏற்படுத்தும் பொருள் என்பதால் தனியாக இழப்பீட்டு வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த இழப்பீட்டு வரி, சிகரெட்டின் நீளம், அதன் அடிப்படை விலை உள்ளிட்டவற்றை பொறுத்து 5 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டது. அதாவது, ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 76 முதல் 4 ஆயிரத்து 170 ரூபாய் வரை இந்த இழப்பீட்டு வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
இவை தவிர்த்து NCCD எனப்படும் தேசிய பேரிடர் அவசர கால நிதியும் வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஆயிரம் சிகரெட்டுகளுக்கு தோரயமாக 510 ரூபாய் முதல் 850 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இழப்பீட்டு வரிக்கு பதிலாக புதிய கலால் வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி ஆயிரம் சிகெரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 150 முதல் 8 ஆயிரத்து 500 வரை கலால் வரி வசூலிக்கப்பட உள்ளது.
மேலும், சிகரெட் உள்ளிட்ட அனைத்துப் புகையிலைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு வசூலித்த என்சிசிடி வரி, எந்த மாற்றமும் இன்றி தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், எம்ஆர்பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலையில் தோராயமாக 50 முதல் 60 சதவீதம் வரை நிறுவனங்கள் வரியாக கட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்த வரிச்சுமையை சமாளிக்க, சிகரெட்டுகளின் விலையை 18 முதல் 35 சதவீதம் வரை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக 68 முதல் 70 மில்லி மீட்டர் என்ற வழக்கமான அளவுள்ள 10 சிகரெட்டுகளைக் கொண்ட ஒரு பெட்டியின் விலை 100 ரூபாய் என்றால், அதன் மதிப்பு 15 ரூபாய் முதல் 25 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஒரு சிகரெட்டின் விலை ஒன்றரை ரூபாயில் இருந்து ஐந்தரை ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது. ஃபில்டர் சிகரெட் விலை இரண்டு ரூபாய் 10 காசுகளும், 65 முதல் 70 மில்லிமீட்டர் வரையிலான சிகரெட் விலை 4 ரூபாய் வரையிலும் உயர்த்தப்படலாம். 70 முதல் 75 மில்லிமீட்டர் நீளத்திலான கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ், மார்ல்போரோ, கிளாஸிக், ரெட் அண்ட் வொயிட் கிங்ஸ், ஐஸ் பர்ஸ்ட் உள்ளிட்ட சிகரெட் விலை 5 ரூபாய் 40 காசுகள் வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
Jan 02, 2026 10:03 AM IST


