Last Updated:
சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார்.
தெலங்கானாவில் விடுதியில் தங்கி பயிலும் சட்ட கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தெலங்கானா மாநிலம் பூபல்பள்ளியில் உள்ள பட்டியலின மாணவிகள் விடுதியில் வார்டனாக பணிபுரிபவர், பவானி. சம்பவத்தன்று விடுதியில் தங்கி பயிலும் மூன்றாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி, தேர்வு முடிந்து இரவு லேட்டாகி விடுதிக்குத் திரும்பி உள்ளார். மாணவி இன்னும் வரவில்லை என வார்டன் பவானி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மாணவியை எங்கே சென்றார் என சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார். அதில் ஆத்திரம் அடைந்த வார்டன் “உன்னை எங்கெல்லாம் தேடுவது. என் வேலைக்கு வேட்டு வைக்கிறாயா?” என கத்தி கூச்சலிட்டு மாணவியைக் கண்டித்து தடியால் தாக்க முயன்றார்.
அதில் அதிர்ச்சி அடைந்த மாணவி மன்னித்து விடுங்கள் எனக்கூறியும், நிதானமாகாத வார்டன் பவானி, மாணவியை கைகளால் சரமாரியாகத் தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதை சக விடுதி மாணவிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பின் தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளிடம் வார்டன் பவானி மிகவும் கோபத்துடன் நடந்து கொள்வதாகவும், அடிக்கடி இது போன்று கண்மூடித்தனமாக மாணவிகளைத் தாக்கி காயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விடுதி வார்டன் பவானியை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!


