17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள், முதல் தகுதிப் போட்டியில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் ரன் எதுவுமின்றியும், அபிஷேக் ஷர்மா 3 ரன்களிலும் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்துவந்த நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அகமது ரன் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 39 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியபோது, ராகுல் திரிபாதியும், ஹென்ரிக் கிளாசனும் சற்று பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கிளாசன் 32 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுமுனையில் திரிபாதி அரைசதம் கடந்தார்.
அதிரடியாக விளையாடிய திரிபாதி 55 ரன்களில் ரன்அவுட்டானார். பின்வரிசையில் கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்தபோதிலும், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 19 புள்ளி 3 ஓவர்களில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்களில் ஆல்அவுட்டானது. கொல்கத்தா அணியில் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. குர்பாஸ், சுனில் நரைன் என இருவரும் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். குர்பாஸ் 14 பந்துகளில் 23 ரன்களும், நரைன் 16 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளிலும், வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளிலும் அரைசதம் அடித்து அசத்தினர்.
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் கேப்டனாக இரண்டு முறை அரைசதங்கள் அடித்தவர்கள் என்ற சாதனைப் பட்டியலில் தோனி , ரோகித் ஷர்மா, வார்னர் ஆகியோருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்தார். 2 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , 14ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இன்னுமொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் உடன் நாளை மறுதினம் பலப்பரீட்சை நடத்தும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
