புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, என்.ஆர். காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக, காய்களை நகர்த்தி வந்தாலும், அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, பிடிகொடுக்க மறுப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை நிலுவையில் இருப்பதும், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் தடையாக இருப்பதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை 14 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் அத்தனை தொகுதிகளை கொடுக்க ரங்கசாமி விரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
ரங்கசாமியை கூட்டணிக்குள் மீண்டும் இழுக்க பல்வேறு அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறது பாஜக. அண்மையில், பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளரான மன்சுக் மாண்டவியா, அதன்பிறகு, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீன் ஆகியோர் அடுத்தடுத்து ரங்கசாமியின் இல்லத்திற்கு சென்று, அப்பாசாமி கோயில் பூஜையில் பங்கேற்றனர்.
அப்போது ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசிபெற்றார் நிதின் நபீன். இந்த சந்திப்புகளின்போது கூட்டணி பற்றி பேசப்படவில்லை என்றே கூறப்பட்டது.
குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி சென்றிருந்த வேளையில், புதுச்சேரிக்கு மகத்தான திட்டங்கள் விரைவில் வரும் என்று பேசினார். இதுவும் ரங்கசாமியை கூட்டணிக்கு அழைப்பதற்கான சமிக்ஞைதான் என அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
அண்மையில் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய், பாஜகவை விமர்சித்தும், அதன் கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு நன்றி கூறியும் பேசியிருந்தார். அப்போது, என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விஜய் தயாராக இருப்பதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
இப்படி இருக்க, 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக ரங்கசாமியின் முடிவு என்னவாக இருக்கும், அரசியலில் எந்தவிதமான அதிர்வலையை அவர் ஏற்படுத்த போகிறார் என்பது போக போகத்தான் தெரியும்.
Puducherry (Pondicherry)
படையெடுக்கும் பாஜக தலைவர்கள்! விஜய்யின் சாஃப்ட் கார்னர்; பிடிகொடுக்காத ரங்கசாமி! புதுச்சேரி அரசியல் சதுரங்கம்

