கோத்தா கினபாலு:
சபாவின் கம்போங் லிகாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று (டிசம்பர் 31, புதன்கிழமை) காலையில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை 10.03 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்தது என்று, லின்தாஸ் (Lintas) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அகஸ்டாவியா ஜோ குவாசி கூறினார்.
தகவல் கிடைத்ததும் 10 தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மின்சாரம் தாக்கிய வேகத்தில் அந்த நபரின் உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதோடு, அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். அதன் பிறகு, அவரது உடல் மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மின்சாரக் கசிவு அல்லது விபத்துக்கான காரணம் குறித்துச் சபா மின்சார நிறுவனம் (Sabah Electricity) மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் மின் அபாயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த பிறகு, காலை 11.10 மணியளவில் தீயணைப்புத் துறையினர் தங்களது பணிகளை நிறைவு செய்தனர்.




