Last Updated:
மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.டி.ஏ. கூட்டணியில் தற்போது துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் அஜித்பவார்.
மகாராஷ்டிராவில் தனது சித்தப்பா சரத் பவாருடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க உள்ளதாக துணை முதலமைச்சர் அஜித் பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 15-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில், பகையை மறந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.
2 தாக்கரேக்கள் இணைந்த நிலையில், மகாராஷ்டிர அரசியலில் உள்ள 2 பவார்களும் இணைய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தனது சித்தப்பா சரத் பவாரை விட்டு விலகி பாஜக, ஷிண்டேவின் சிவசேனா ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு துணை முதல்வரான அஜித் பவார், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அஜித் பவார், பிம்ப்ரி-சின்ச்வட் மாநகராட்சி தேர்தலில் தனது கட்சி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு சரத்பவார் தரப்பில் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை என கூறப்படுகிறது.
29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ஆம் தேதி தேர்தல் நடந்து 16ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் நிலையில் பாஜக, ஷிண்டே-வின் சிவசேனா கூட்டணியில் இடங்கள் பகிர்வு தொடர்பாக இழுபறி நீடிப்பது குறிப்பிடத்தக்கது.


