Last Updated:
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குல்தீப் சிங்கிற்கு விசாரணை நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ஆயுள் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததுடன் ஜாமினும் அளித்தது.
இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொடூரமானது என குறிப்பிட்டார். குல்தீப் சிங் அதிகாரம் மிக்க எம்எல்ஏவாக இருந்தார் என்றும், பாதிக்கப்பட்ட பெண் மைனர் ஆக இல்லையென்றாலும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும் என்று வாதிட்டார்.
குல்தீப் சிங் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், எம்எல்ஏ என்ற அடிப்படையில் வழங்கிய தண்டனையை ஏற்க முடியாது என்றனர்.


