Last Updated:
ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, மின் கம்பத்தின் மீதேறி மின் இணைப்புகளை துண்டித்தார்.
உத்தராகண்டில் மின்வெட்டால் கோபமடைந்த ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஜப்ரேடாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, ரூர்க்கியில் உள்ள மின்சாரத் துறையின் 3 மூத்த அதிகாரிகளின் வீடுகளுக்கான மின்சார இணைப்பைத் துண்டித்தார்.
அறிக்கையின்படி, ஜப்ரேடாவில் தினமும் 5 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ இந்த நடவடிக்கையை எடுத்தார். மின் இணைப்பை துண்டிப்பதற்காக, எம்எல்ஏ மின்கம்பங்களில் ஏறியதால் கோபமடைந்த மின்சாரத்துறை, எம்எல்ஏ மீது ரூர்க்கி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று மின் கம்பங்களில் ஏணி மற்றும் கருவிகளுடன் ஏறி, எரிசக்தி கழகத்தின் தலைமைப் பொறியாளர் அனுபம் சிங், கண்காணிப்புப் பொறியாளர் விவேக் ராஜ்புத் மற்றும் நிர்வாகப் பொறியாளர் வினோத் பாண்டே ஆகியோரின் அரசு குடியிருப்புகளின் மின் இணைப்புகளைத் துண்டித்தார்.
ஜப்ரேடா எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, தனது ஆதரவாளர்களுடன் மின்வெட்டுக் கருவிகள் மற்றும் ஏணியை ஏந்தி ரூர்க்கிக்கு வந்தார். பின்னர், அவர் முதலில் வோட் கிளப்பில் அமைந்துள்ள கண்காணிப்புப் பொறியாளர் விவேக் ராஜ்புத்தின் அரசு இல்லத்திற்கு வெளியே உள்ள மின்கம்பத்தில் ஏறி அவரது வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்தார்.
இதன் பின்னர், எம்.எல்.ஏ. தலைமைப் பொறியாளர் அனுபம் சிங் மற்றும் நிர்வாகப் பொறியாளர் வினோத் பாண்டே ஆகியோரின் இல்லத்தை அடைந்தார். அங்கும் அவரே மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்தார். எரிசக்தி கழகத்தின் மூத்த அதிகாரிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பல நாட்களாக எந்த முன்னறிவிப்பும் இல்லாத 5 முதல் 8 மணி நேர மின்வெட்டால் தனது பகுதியில் உள்ள மக்கள் கடுமையான அவதிப்படுவதாக எம்எல்ஏ வீரேந்திர ஜாதி குற்றம்சாட்டினார். இந்த மின்வெட்டால் மக்கள் தங்கள் தொழிலில் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் எம்எல்ஏ வீரேந்திர ஜாதி குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த 10 நாட்களாக இந்தப் பிரச்சனையை துறையிடம் எழுப்பி வருவதாகவும், ஆனால் யாரும் கவனம் செலுத்தவில்லை என்றும், இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரிகளை விமர்சித்த வீரேந்திர ஜாதி, ஒரு மணி நேர மின்வெட்டால் அதிகாரிகள் வருத்தமடைந்ததாகவும், அதே நேரத்தில் பொதுமக்கள் தினமும் பல மணி நேரம் இருளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினார்.
எம்எல்ஏவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று மின்சாரத்துறை விவரித்துள்ளது. ரூர்க்கி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், எம்எல்ஏ முறையான மின்வெட்டு இல்லாமல் மின்கம்பிகளை துண்டித்ததாகவும், இது ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்றும் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
Uttarakhand (Uttaranchal)


