கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார்.
முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர். இதனால் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது பயணம் தடங்கலின்றி தொடர்ந்தது.
பின்னர் ஐதராபாத், மும்பை சென்ற மெஸ்சி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மெஸ்சி மும்பையில் இருந்து தனி விமானத்தில் நேற்று பிற்பகல் டெல்லிக்கு சென்றார்.
மெஸ்சியின் வருகையொட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபலங்களுக்கான கண்காட்சி கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மினெரவா ஆல் ஸ்டார் அணி 6-0 கோல் கணக்கில் செலிபிரட்டி ஆல்-ஸ்டார் அணியை வீழ்த்தியது. மெஸ்சியை காண மைதானத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மெஸ்சி நுழைந்ததும் அவரது பெயரை உச்சரித்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இளம் கால்பந்து வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடிய மெஸ்சி,பின்னர் மைதானத்தில் கரைபுரண்ட உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில் வலம் வந்தார். மெஸ்சியுடன், இண்டர் மியாமி கிளப் வீரர்கள் ரோட்ரிகா டி பால், லூயிஸ் சுவாரஸ்
ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் பந்தை ரசிகர்களை நோக்கி உதைத்து குஷிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சுங் பூட்டியா, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோகன் ஜெட்லி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது மெஸ்சிக்கு இந்திய அணிக்குரிய சீருடை மற்றும் பேட்டை நினைவுப்பரிசாக ஜெய்ஷா வழங்கினார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டது.
அப்போது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய மெஸ்சி, ‘இந்த 3 நாள் இந்திய பயணத்தில் என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே இது எங்களுக்கு அழகான அனுபவமாகும். உங்களின் அன்பையும், நேசத்தையும் எங்களுடன் எடுத்து செல்கிறோம். நாங்கள் நிச்சயம் மீண்டும் இந்தியாவுக்கு வருவோம். கால்பந்து போட்டியில் விளையாடவோ அல்லது இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ மறுபடியும் இந்தியாவுக்கு வருகை தருவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.
முன்னதாக மெஸ்சி, பிரதமர் மோடியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலையால் மெஸ்சியின் டெல்லி வருகை தாமதம், அதே நேரத்தில் பிரதமரின் வெளிநாட்டு பயணம் காரணமாக அந்த சந்திப்பு கைவிடப்பட்டது.
38 வயதான மெஸ்சி கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான மாரடோனாவின் வாரிசாகவும், சமகாலத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சரிநிகர் போட்டியாளராகவும் இருக்கிறார். 5.7 அடி உயரமே கொண்ட அவர் மைதானத்துக்குள் இறங்கிவிட்டால், அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாத வகையில் விளையாடுவார்.அத்தகைய பேரும், பெருமையும் கொண்ட மெஸ்சி ‘கோட்’ அதாவது ‘கிரேட்டஸ்ட் இன் ஆல் த டைம்ஸ்’ என்ற பெயரில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.
தங்கள் கனவு நாயகனை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் இருந்தும் நிறைய ரசிகர்கள் சென்றனர். டிக்கெட் கட்டணம் ரூ.4,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை இருந்தது. கருப்பு சந்தையில் இதைவிட அதிகமான விலையில் டிக்கெட் கட்டணம் எகிறியது.
கொல்கத்தாவில் முதல் நிகழ்ச்சி நடந்தது. மைதானத்தில் மெஸ்சி 2 மணி நேரம் இருப்பார், சுற்றிவருவார், காட்சி போட்டியிலும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில் அவர் சால்ட் லேக் ஸ்டேடியத்துக்குள் வந்தவுடன் அவரை சுற்றி மந்திரிகள், உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் நின்றுகொண்டதால் ரசிகர்களால் மெஸ்சியை பார்க்கக்கூட முடியவில்லை. கேலரியிலும், நாற்காலியிலும்ஏறி நின்று பார்த்தும் அவரை காணமுடியவில்லை.
மந்திரிகளும், மிக முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களாக இருப்பது தவறு இல்லை. ஆனால் ரசிகர்களை மறைத்துக்கொண்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல. ஒரே களேபரமாக கூச்சலும், குழப்பமுமாக இருந்த நிலையில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பதற்றமான சூழ்நிலை நிலவியதால் மெஸ்சியை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் 20 நிமிடத்திலேயே அழைத்து சென்றுவிட்டனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். கையில் கிடைத்த நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்கள், விளம்பர பலகைகள், தடுப்பு கம்புகள் உள்ளிட்டவற்றை மைதானத்துக்குள் நாலாபுறமும் வீசி எறிந்தனர். அந்த ஸ்டேடியமே போர்க்களம்போல மாறியது.




