ஈப்போ:
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சிம்பாங் பூலாயில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் ஒரு பெண் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது குறித்துப் பேசிய பேராக் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் கூறுகையில், “சம்பந்தப்பட்ட சந்தேக நபர் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவரைப் பிடிப்பதற்காக, புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம் மற்றும் பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்தின் போது காயமடைந்த சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, தற்போது பூரண குணமடைந்து வருவதாகவும், அவரது நலன் கருதி அவர் சொந்த மாநிலத்திற்கே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டத்தோ நூர் ஹிசாம் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணம் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




