டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிப்போர் எண்ணிக்கை, அதிகரித்தவண்ணம் உள்ளது. வாடகை கார், பைக் மற்றும் ஆட்டோக்களை இயக்கும், ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் விதிமுறைக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளன. ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை டாக்சி நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாக, ‘பாரத் டாக்ஸி’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறினார். டாக்ஸி ஓட்டுநர்களின் வருவாயை பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த பாரத் டாக்ஸி செயலியானது ’சஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடேட்’ என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ளது.
இந்த வணிக மாதிரியானது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான ஒருங்கிணைப்பு மாதிரியாக இல்லாமல் ஓட்டுநர்களுக்கு சொந்தமான கூட்டுறவு மாதிரியில் செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் வாடகை வாகன ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஓட்டுநர் தன் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினால், மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் ஓட்டுநருக்குச் சென்றடையும். ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை இயக்கும் ஓட்டுநருக்கு, மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் புறப்படும் இடத்தில் இருந்துதான், வாடகை கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளரை ஏற்றிக் கொள்வதற்காக ஓட்டுநர் தான் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளரின் இடத்திற்கு பயணம் செய்யும் தூரம் 3 கிலோமீட்டருக்கு உட்பட்டு இருந்தால், எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை வாகன ஒருங்கிணைப்பாளர்கள், ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில் மாநில அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அதிக பயன்பாடு இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இந்த பாரத் டாக்ஸி செயலி விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
December 12, 2025 6:52 AM IST

