Last Updated:
நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் முலான்புரில் உள்ள மைதானத்தில் 2வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து பேட்டிங்கில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை முடித்தது. தென் ஆப்பிரிக்காவில் குயின்டன் டி காக் 46 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ராம் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் அதிகப்பட்சமாக 54 ரன்களை கொடுத்தார்.
தொடர்ந்து 214 ரன்கள் இலக்கை எட்டி பிடிக்க இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். கடந்த முதல் டி20 போட்டியில் 4 ரன்களில் அவுட் ஆன சுப்மன் கில் இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா 17 ரன்களிலும், நான்காவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வாரி குவித்தது.
பெரிதும் எதிர்பார்த்த ஹர்திக் பாண்டியா நிதானமாக தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். இருந்தபோதிலும், 20 ரன்களை மட்டுமே எடுத்து 15வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் 27 ரன்களை குவித்து தனது விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணியில் திலக் வர்மா மட்டுமே அரை சதம் கடந்து 34 பந்துகளில் 62 ரன்களை குவித்து தனது விக்கெட்டை 19.1-ல் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில், மார்கோ ஜான்சன் மற்றும் சிபம்லா ஆகியோர் தலா இரு விக்கெட்டையும், இங்கிடி, ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 போட்டிதான் முதலாவது சர்வதேச போட்டியாகும். இந்தப் போட்டியில் 213 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்கா மலான்புர் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த நாடு எனும் சிறப்பை பெற்றது.
December 11, 2025 10:44 PM IST


