Last Updated:
2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில், 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்க மத்திய அரசு சட்டம் ஏதும் கொண்டு வருகிறதா என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், சட்டம் இல்லாத சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில், மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் வினவியிருந்தார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சமூகநலத்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, அரசமைப்பு சட்டம் 124, 217, 224 பிரிவுகளின் கீழ் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதில் இடஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2025 நவம்பர் வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 32 பேர் பட்டியலினத்தவர் என்றும், 17 பேர் பழங்குடியினர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 103 இதர பிற்படுத்தப்பட்டோர், 46 சிறுபான்மையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 129 பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Delhi Cantonment,New Delhi,Delhi
December 11, 2025 12:04 PM IST


