இருந்தபோதிலும் அரஸ் நதியில் கட்டப்படும் இந்த மூன்றாவது அணையின் திறப்பு நிகழ்வுக்காக இரான் அதிபர் சென்றார். இந்த அணை இரண்டு நாடுகளும் சேர்ந்து திட்டமிட்டுக் கட்டிய அணை.
இரண்டு நாடுகளுக்கும் சில கருத்து வேற்றுமைகள் நிலவினாலும், இந்த அணைத் திட்டம், “நட்பின் சின்னம்’ என்று இரான் அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
இந்த அணை ஞாயிற்றுக்கிழமை விபத்து நடப்பதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு திறக்கப்பட்டது.
என்ன நடந்தது?
அணை திறப்பு நிகழ்வு முடிந்து இரானுக்குத் திரும்பும் வழியில்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. அஜர்பைஜான் – இரான் எல்லைப் பகுதி, காடுகளும் மலைகளும் நிரம்பிய பகுதி. அந்தப் பகுதியில் பயங்கரப் பனிமூட்டம் நிலவியதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில், இரானின் தப்ரிஸுக்குச் சென்றுகொண்டிருந்தபோது 50 கி.மீ முன்னதாக, வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணம் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியிருக்கிறது.
உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புக்குழு ஒன்று அனுப்பப்பட்டது. துருக்கியும் ஆளில்லா விமானத்தைத் தேடுதல் பணிக்காக அனுப்பியது. ரஷ்யாவும் ஒரு மீட்புக்குழுவை அனுப்பியது.
நீண்ட தேடுதல் முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தைத் தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன. ‘அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,’ என முதலில் இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. பின்னர் இரான் அரசு அதிகாரபூர்வமாக அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை உறுதிசெய்தது. இரான் மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக, அந்த நாட்டில் விமானப் போக்குவரத்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

