Last Updated:
சவுதி அரேபியா அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறை அண்டை நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவூதி அரேபியாவில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த விதிகளை அரசு தளர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சவுதி அரேபியாவில் மதுபானக் கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் இந்தத் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அங்கு மது அருந்துவது அல்லது மதுபானங்களை வைத்திருப்பது போன்றவற்றை செய்வதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்பு சவுக்கடிகள் வழங்கப்பட்ட நிலையில், சமீப ஆண்டுகளாக நீதிமன்றங்களால் இந்தத் தண்டனை கைவிடப்பட்டுள்ளது. மேலும், சிறைத் தண்டனை, கடுமையான அபராதம், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுபானங்களைக் குடித்தல் அல்லது வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
இந்த நிலையில், வெளிநாட்டவர் வசதிக்காக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதுபானக் கடைகளில் மட்டும் மதுபானங்களை வாங்கிக்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த வெளிநாட்டவர் மாதம் குறைந்தது 50,000 ரியால்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்த பின்னர், ரியாத்தில் உள்ள மதுபானக் கடையில் மதுபானங்களை வாங்கியவர்கள் தங்களது அனுபவங்களை ஆச்சரியத்துடன் ஊடகத்தினரிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். சவுதி அரேபியா அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறை அண்டை நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
December 08, 2025 5:06 PM IST
முதன்முறையாக மதுபான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சவூதி அரேபிய அரசு.. ஒரேயொரு கடையில் மட்டும் விற்பனைக்கு அனுமதி..


