Last Updated:
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது.
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவரும், மிசோரம் மாநில முன்னாள் கவர்னருமான சுவராஜ் கவுஷல் தனது 73 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவில் முன்னணி அரசியல் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் செயல்பட்டவர் சுஷ்மா சுவராஜ். இவர் 1977 ஆம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே அரியானா மாநிலத்தின் அமைச்சரவையில் இடம்பெற்று இந்தியாவின் இளம் வயது கேபினட் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 2014 முதல் 2019 வரை வெளிவிவகாரத் துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு பல்வேறு அவசரகால உதவிகளை வழங்கி புகழ்பெற்றிருந்தார் சுஷ்மா சுவராஜ்.
இவரது கணவர் சுவராஜ் கவுசல் பிரபல சட்ட வல்லுநரும், மூத்த அரசியல்வாதியும் ஆவார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய சுவராஜ் கவுசல் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி இருக்கிறார். சட்டக் கல்லூரியில் பயிலும் போது சுஷ்மா சுவராஜும், சுவராஜ் கவுசலும் நட்புடன் பழகி வந்த நிலையில் 1975 ஆம் ஆண்டு திருமணம் முடித்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மிசோரம் மாநிலத்தின் கவர்னராக தனது 34 வயதிலேயே சுவராஜ் கவுசல் பணியாற்றி இருந்தார். 1998 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் சுவராஜ் கவுசல் பணியாற்றி இருக்கிறார்.
சுஷ்மா சுவராஜ் – சுவராஜ் கவுசல் தம்பதியினருக்கு பன்சூரி சுவராஜ் என்ற மகள் உள்ளார். சுவராஜ் கவுசல் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
December 04, 2025 3:48 PM IST


