கோலாலம்பூர்:
அமெரிக்காவின் சமரச முயற்சியால் எட்டப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உடனடியாகவும் செயல்படுத்தத் தங்களின் உறுதியை தாய்லாந்து, கம்போடியா, மலேசியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னிலையில் தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. எனினும், இந்த வாரம் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், மலேசியப் பிரதமர் அன்வார், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் அவசர தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மலேசியப் பிரதமர் அன்வார், தமது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,
“எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படாது. எல்லைப் பகுதிகளில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அவசரமாக அகற்றுவதில் அனைத்து தலைவர்களும் உடன்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையைத் தீர்க்க முனைவுடன் செயல்பட்ட அமெரிக்க அதிபரை நான் பாராட்டுகிறேன்,”
என்று குறிப்பிட்டார்.
தாய்லாந்து, தற்காலிகமாக சண்டை நிறுத்தத்தை நிறுத்துவதாக இந்த வாரம் அறிவித்தது. கம்போடியா புதிதாக வைத்த கண்ணிவெடிகளில் தனது படைவீரர்கள் காயமுற்றதாக பேங்காக் குற்றஞ்சாட்டியுள்ளது. தாய்லாந்து மன்னிப்புக் கோரியிருந்தாலும், அதை கம்போடியா நிராகரித்துள்ளது.
இதற்கிடையில் தாய்லாந்து, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை தடையின்றி தொடரும் என்று தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை, வர்த்தக பேச்சுவார்த்தையை பாதிக்காது என்றும் பேங்காக் விளக்கியுள்ளது.
கடந்த அக்டோபரில் வாஷிங்டனும் பேங்காக்கும் இணைந்து அறிவித்த இருதரப்பு வர்த்தக கட்டமைப்பின் கீழ், தாய்லாந்தில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் 19 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். சில பிற பொருட்களுக்கு வரியை முழுமையாக நீக்குவதும் பரிசீலனையில் உள்ளது.



