179 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து 179 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு கொச்சி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட விமானிகள் உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அந்த விமானத்தை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11.12 மணியளவில் தரையிறக்கினர். தரையிறங்கியதும் விமானத்தில் இருந்த 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இன்ஜினில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வலது இன்ஜினில் இருந்து சந்தேகத்திற்கிடமான தீப்பிழம்புகள் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)