அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர்.
இவர் பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், 2023-ல் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்குப் பிறகு அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இறுதியாக அவரின் விருப்பத்தின்படி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். இந்தச் சிறுநீரகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவர் இறந்திருக்கிறார். இவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டதுதான் காரணமா எனப் பலர் அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம், மூளை சாவடைந்த இருவருக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பன்றியின் இதயமும் இருவருக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே அவர்களும் இறந்துள்ளனர்.

