பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஒரு கட்டத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து விலகி, ‘ஜன் சுராஜ்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.
கட்சியை வளர்ப்பதற்காக சொந்தமாக வியூகம் வகுத்த அவர், பிகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டார். சுமார் 5,000 கிராமங்களுக்கு நேரடியாக சென்று, 5,000 பொதுக்கூட்டங்களை நடத்தினார். வான் வழிப் பயணத்தை தவிர்த்துவிட்டு தரை வழியாகவே பட்டி தொட்டி எங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததற்காக ஊதியமாக பெற்ற தொகையில் 98 கோடி ரூபாயை தனது கட்சியின் தேர்தல் செலவுக்காக வாரி இறைத்தார். மென்பொறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என நிபுணத்துவம் பெற்ற 1,300 பேர் கொண்ட குழுவை அமைத்து 38 மாவட்டங்களிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட ஒருங்கிணைத்தார்.
சென்ற இடமெல்லாம் மக்கள் ஆதரவு கிடைத்ததைப் பார்த்து உற்சாகமடைந்த பிரசாந்த் கிஷோர், பிகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார். இந்தத் தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதில் ஒரு தொகுதி குறைந்தாலும் அது தோல்வியாகவே கருதப்படும் என்று ஆவேசமாகக் கூறியிருந்தார்.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி என்று திட்டவட்டமாகக் கூறி வந்தார். தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும், ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்றும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து பிரசாந்த் கிஷோரிடம் கேட்டபோது, ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக தடாலடியாக அறிவித்தார்.
ஆனால், பிகார் சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பில் வெளிவந்ததுபோலவே அமைந்துவிட்டன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட ஓரிரு தொகுதியும் கிடைக்காமல் போய்விட்டது.
கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறி வந்தார். இந்த தேர்தலில் அவரது கட்சியால் ஒட்டமொத்தமாக 10 லட்சத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அக்கட்சி போட்டியிட்ட 238 தொகுதிகளில் 98 விழுக்காடு அதாவது 233 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. ஒரு தொகுதியில் கூட இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் மண்ணை கவ்வியது.
பிரசாந்த் கிஷோர் வசிக்கும் கர்கஹர் சட்டப்பேரவைத் தொகுதியில் கூட அவரது கட்சி வெறும் மூன்று விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் ‘கிங் மேக்கராக ஜொலித்த பிரசாந்த் கிஷோர், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
2012-ஆம் ஆண்டில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பிரபலமடைந்தார். அந்த தேர்தலில் நரேந்திர மோடியின் உரையை குஜராத்தில் உள்ள 26 நகரங்களில் 53 இடங்களில் ஒரே நேரத்தில் 3டி ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்து அசத்தினார். இதேபோன்று தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
தனது உழைப்பால் 10 முதலமைச்சர்களை உருவாக்கியிருப்பதாகவும், பிகார் மாநில வளர்ச்சியே தனது இலக்கு என்றும் கூறி தேர்தலை சந்தித்த பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் முடிவு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கட்சியில் வலுவான அடிப்படை கட்டமைப்பு இல்லாதது, பிரபலம் இல்லாத வேட்பாளர்களை களமிறக்கியது போன்றவை பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளை வாக்குகளாக மாற்ற முடியாமல் போனதற்கு காரணம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தூய்மையான அரசியலை முன்னெடுப்பேன் என்ற முழக்கத்தை முன்வைத்த போதிலும் ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 45 விழுக்காட்டினர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில், இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக 12 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும், 14 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் ஜன் சுராஜ் கட்சியால் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 80 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருப்பதால், அரசியலை விட்டு விலகுவதாக கூறியதை பிரசாந்த் கிஷோர் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
November 15, 2025 2:42 PM IST
10 முதல்வர்களை உருவாக்கியதாக தம்பட்டம்… 6 ஆயிரம் கி.மீ பாதயாத்திரை.. பிரசாந்த் கிஷோர் சறுக்கியது எப்படி?

