Last Updated:
பீகார் தேர்தலில் பாஜக 89 இடங்களில் முன்னிலை பெற்றதால், முதலமைச்சர் பதவியை கோரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை பாஜக கோரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம், 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும் முதலமைச்சர் பதவி நிதிஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த 2025 தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், தேர்தல் ஆணையத்தின் 9 மணி நிலவரப்படி பாஜக 87 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையிலும் என 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 78 இடங்களில் வெற்றியும், 7 இடங்களில் முன்னிலையிலும் என 85 இடங்களிலும் இருக்கின்றன.
முக்கிய திட்டங்கள் முதல் புதிய மசோதாக்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வரை கொள்கை வகுப்பில் பாஜக-வின் கரங்கள் ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் அரசாங்கத்தின் முக்கியமான முடிவுகள் மத்திய அரசால் வடிவமைக்கப்படலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதேநேரம், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமாக ஐக்கிய ஜனதாதளம் இருப்பதால், நிதிஷ்குமார் முதல்வர் பதவியை தக்கவைப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், புதிய அரசில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதே பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
November 14, 2025 10:15 PM IST
Bihar Election | என்.டி.ஏ.வை தேர்ந்தெடுத்த பீகார்… பாஜகவுக்கு முதலமைச்சர் பதவியா? – அரசியல் விமர்சகர்கள் கருத்து


