Last Updated:
காலநிலைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகளவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
ஜெர்மன்வாட்ச் குளோபல் க்ளைமேட் ரிஸ்க் இன்டெக்ஸ் (CRI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, இந்தியாவின் மிகப்பெரிய பாதிப்பை அப்பட்டமாக எடுத்துகாட்டியுள்ளது. 1995 முதல் 2024 வரையிலான மூன்று தசாப்த காலப்பகுதியில் காலநிலைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகளவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
தொடர்ச்சியான தீவிர இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை இந்த தரவரிசைப் பட்டியல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது அரிதான, தனித்துவமான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவை வேறுபடுத்துகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா கிட்டத்தட்ட 430 தீவிர வானிலை நிகழ்வுகளைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக 80,000-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார இழப்புகள் 170 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
காலநிலை ஆபத்துகளால் இந்தியாவிற்கு ஏற்படும் பன்முக வெளிப்பாட்டின் அளவுகளை இந்த பேரிடர் விவரங்கள் காண்பிக்கின்றன. 1999-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தை சூறையாண்ட சூப்பர் சூறாவளி, 2013-ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய உத்தராகண்ட் வெள்ளம் மற்றும் 1998, 2002 மற்றும் 2015 போன்ற ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற வெப்ப அலைகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த கொடூரமான எண்ணிக்கைக்கு பெரிதும் பங்களிக்கின்றன.
தொடர்ச்சியான புயல்கள் மற்றும் வெள்ளங்கள் பெருவாரியான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகள் மக்கள் இருப்பில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த தொடர்ச்சியான அழிவு சுழற்சி என்பது, அடுத்த காலநிலை அதிர்ச்சி வருவதற்குள் மீட்பு முயற்சிகள் வேகமாக செய்யப்படாமல் உள்ளதையே எடுத்துக்காட்டுகிறது. இதனால் நாட்டின் நிலையான வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சமீபத்திய சில வருடாந்திர குறியீடுகளில் இந்தியாவின் தரவரிசை ஓரளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிலையில், நீண்டகால தரவுகள் முக்கியமான எச்சரிக்கையை சுட்டிக்காட்டியுள்ளன. அதிக மனித இறப்பு எண்ணிக்கை மற்றும் பெருமளவு பொருளாதார இழப்புகள், அவற்றில் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்படாமல் உள்ளதால், அரசாங்கத்தின் மீதும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீதும் நேரடியாக மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன.
துரிதப்படுத்தப்பட்ட காலநிலை நடவடிக்கைக்கான அவசர அழைப்பாக இந்த அறிக்கை உள்ளது. வளர்ந்த நாடுகள் இழப்பு மற்றும் சேத நிதி தொடர்பான தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது. அப்போதுதான் இந்தியா போன்ற வளரும் நாடுகள் இயற்கை பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு, பேரிடர்கள் குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கும் மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதுகாக்க வலுவான உத்திகளில் அதிக முதலீடு செய்ய முடியும்.
November 13, 2025 6:28 PM IST


