துபாய்: ஐசிசி தொடர்கள் மற்றும் அதன் பைனல்கள் என்று வந்துவிட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தவிர்க்க முடியாதவை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த அணிகளின் கடந்த கால செயல்பாடு அப்படி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
“இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளில் தற்போது உள்ள வீரர்களின் தரத்தை பாருங்கள். ஐசிசி தொடர்களில் அவர்களது அண்மைய செயல்பாட்டை பாருங்கள். இரண்டு அணிகளும் தவிர்க்க முடியாத அணிகள். அவர்களை வெல்வது கடினம். (இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா இரண்டு முறை சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது)
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில் தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வரும் மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான் தான். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களது செயல்பாடு அபாரமாக உள்ளது. இது மாதிரியான பெரிய தொடர்களில் அவர்களது செயல்பாடு கணிக்க முடியாதது” என கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.