4
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளை அனுமதியின்றி அபகரித்து, சாத்தியக்கூற்றறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட வந்த அதிகாரிகளை மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதனையடுத்து அவர்களது செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.இந்நிகழ்வு நேற்று (06) புதன்கிழமை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில், கனிய வள மணல் அகழ்வுக்கான சாத்தியக்கூற்றறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைக்காக நேற்று மன்னார் மற்றும் தென் பகுதிகளிலுள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் பெருந் தொகையான வாகனங்களில் இப் பகுதிக்கு வருகை தந்தனர். அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள்,பொது அமைப்புக்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். வருகை தந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாது பாதையை தடுத்த இவர்கள், அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.
இச்சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வேட்பாளர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியதால், அதிகாரிகள் பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடை முரண்பாடு ஏற்பட்டது.
தொடர்ந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையி டுவதற்கு உட்செல்ல முயன்றபோது, மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களால்,
இப்பிரதேசம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை மக்கள் தௌிவுபடுத்தினர்.இதையடுத்து அவர்களது கள விஜயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், அரச பணிக்கு இடையூறு விளைவித்தமைக்காக நீதிமன்றத்தை பொலிஸார் நாடியுள்ளனர்.
தலைமன்னார் விஷேட, மன்னார் குறூப் நிருபர்கள்

