புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்மற்றும் அதன் பணியாளர்கள் மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி கடத்திச் சென்றனர். கடந்த 3 மாதங்களாக அதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், கடந்த சனிக்கிழமை ரூயென் சரக்கு கப்பலையும் அதன் 17 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டது. சுமார் 40 மணி நேர நடவடிக்கைக்கு பிறகு இந்த கப்பலும் அதன் பணியாளர்களும் மீட்கப்பட்டனர்.
மேலும் சோமாலிய கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படை சரணடையச் செய்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் மற்றும் 7 பல்கேரிய குடிமக்கள் உள்ளிட்ட அதன் பணியாளர்களை மீட்டஇந்திய கடற்படையின் துணிச்சலான நடவடிக்கைக்காக பிரதமர்நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு பல்கேரியாவின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான மரியா கேப்ரியேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார். இதற்கு வெளியுறவுஅமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அளித்த பதிலில், அதுதான் நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
t1